ஜம்மு: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில், பருவநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தால் இயற்கையாக உருவாகும் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி உள்ளது. இது பக்தர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் புனித தலமாகும். இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த ஜூன் 3-ம் தேதி தொடங்கியது.
எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பனிலிங்கத்தின் நிலை பக்தர்களை வருத்தமடையச் செய்துள்ளது. கடந்த மே 23-ம் தேதி பிஎஸ்எப் வெளியிட்ட புகைப்படத்தில் 7 அடி உயரத்தில் பனிலிங்கம் காணப்பட்டது. ஆனால், புனித யாத்திரை தொடங்கிய நாளில் சுமார் 5 அடி உயரத்திற்கே அது குறைந்துவிட்டது. ஒரு வார காலத்திற்குள் சுமார் 90 சதவீதம் உருகிவிட்டது என்பது அதிர்ச்சியளிக்கிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது குறித்து கூறுகையில், 'கடந்த 2004, 2006, 2007, 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளிலும் பனிலிங்கம் உருகியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட மிக வேகமாக உருகி வருவதற்கு பருவநிலை மாற்றமே முக்கிய காரணம்' எனத் தெரிவித்துள்ளனர். அமர்நாத் குகைக் கோயில் பகுதியில் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது.
புனித யாத்திரையின் தொடக்க நாளில் இருந்து இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் குகைக் கோயிலுக்குள் செல்லும்போது, அங்கு வெப்பம் அதிகரிக்கிறது. பொதுவாக, குகையின் மேற்பரப்பில் இருந்து வடியும் நீர்த்துளிகள் பனிலிங்கமாக மாறும். ஆனால் தற்போது நீர்த்துளிகளின் அளவு குறைந்து, வெப்பம் அதிகரித்துள்ளதால் பனிலிங்கத்தின் உயரமும் அகலமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
குகைக்குள் வெப்பக் காற்று நுழைவதாலும், நீர்த்துளிகள் குறைவதாலும் பனிலிங்கம் வேகமாக உருகி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விளக்குகின்றனர். இந்த அசாதாரண நிலை, பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்ஜிதா முப்தி, தனது சமூக வலைதளப் பதிவில், 'மரங்களை வெட்டுவது, சட்டவிரோத சுரங்கப் பணிகள், மலைப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டுவது போன்ற மனிதச் செயல்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாகவே பருவநிலை மாற்றத்தால் அமர்நாத் பனிலிங்கம் உருகி உள்ளது. மலைகள், நதிகள், பனிச்சிகரங்களைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வு, பருவநிலை மாற்றத்தின் அபாயங்கள் குறித்தும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பரவலான விவாதங்களை எழுப்பியுள்ளது.
