சென்னை: அதிமுக பிளவு திமுகவிற்கு சாதகமாக அமையும் எனத் தெரிவித்துள்ள சசிகலா, கட்சி ஒன்றிணைந்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக ஒற்றுமைக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, அதிமுகவின் தற்போதைய நிலைக்கு ஒருசிலரின் துரோக சிந்தனையே காரணம் என மறைமுகமாக சுட்டிக்காட்டினார். ஒற்றுமையாக இருந்திருந்தால் இன்று அதிமுக ஆட்சி அமைந்திருக்கும் என்றும், மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதில் தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
திமுக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவலைக் கேட்டு கடந்த 4 நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என சசிகலா வேதனையுடன் தெரிவித்தார். அதிமுகவின் பிளவு திமுகவிற்கு மட்டுமே சாதகமாக அமையும் என்றும், திமுக எதிர்ப்பு மனப்பான்மையை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதிமுக ஒன்றிணைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கூறிய சசிகலா, விரைவில் கட்சி ஒன்றிணையும் என நம்புவதாகவும், அதன் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளிப்படுத்தினார். மேலும், அதிமுகவை அழிக்க நினைத்த கட்சி திமுக என்றும், அதன் எதிர்ப்பில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.