தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகின்றன. சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களை வென்ற பிறகு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியாகவும் அதிமுக பிரிந்தது. இந்த பிளவு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பின்போது வெளிப்படையாகத் தெரிந்தது. எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்புக்கு 25 எம்.எல்.ஏ.க்களும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு 22 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தனர்.
சபாநாயகரிடம் இரு தரப்பினரும் மாறி மாறி மனு அளித்து வந்தனர். த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்ததுடன், கொறடா உத்தரவை மீறியதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளித்தார். அதேபோல், எஸ்.பி. வேலுமணி தரப்பும் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை கோரி மனு அளித்தது. இந்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் அணியில் இருந்த சில எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மேலும், சிலர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்து, எடப்பாடி பழனிசாமி அணியின் பலம் அதிகரித்தது. இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் வீட்டில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு, திடீர் திருப்பமாக எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை அவரது பசுமை வழிச்சாலை இல்லத்தில் சந்தித்துப் பேசினர். கட்சியின் நலன் கருதி இரு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக, எஸ்.பி. வேலுமணி தலைமையில் 14 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க புறப்பட்டனர். பறித்த கட்சிப் பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது. இரு அணிகளும் இணைந்த பிறகு, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட கோரிக்கை திரும்பப் பெறப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

