அதிமுகவும் திமுகவும் இணைந்துவிட்டதாகவும், அதை தைரியமாக அறிவிக்க முடியுமா என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.
இந்த விழாவில், அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, இளவரசன், முன்னாள் அமைச்சர் பச்சைமால், திருநெல்வேலி முன்னாள் மேயர் விஜயலட்சுமி, அதிமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி ஜான் மகேந்திரன், ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தவசி, பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி ஆகியோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 'அ.தி.மு.கவும் தி.மு.கவும் சேர்ந்துடுச்சி.. இன்னும் டிக்ளேர் தான் பண்ணல.. தைரியம் இருந்தால் மக்கள் கிட்ட சொல்ல சொல்லுங்க பாப்போம்.. சொல்லமாட்டாங்க.. கொஞ்ச நாள் கழிச்சி சொல்லுவாங்க.. எடப்பாடி பழனிசாமி விடும் அறிக்கையை அறிவாலயத்தில்தான் டைப் அடித்து கொண்டிருக்கிறார்கள். முதலில் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவார். அடுத்த 5 நிமிடத்தில் ஈபிஎஸ் அதே அறிக்கையை வெளியிடுவார்' என்று குற்றம்சாட்டினார்.
மேலும், 'எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் நின்றிருந்தால் ஈபிஎஸ் தோற்றிருப்பார். எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரை ஈபிஎஸ் விலைக்கு வாங்கினார். குதிரை பேரம் இல்லை, எதிர்காலத்தை நம்பி தவெகவில் இணைகிறார்கள். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் ஒரு ரூபாய் கமிஷன் கிடையாது' என்றும் அவர் தெரிவித்தார்.