சிவகாசி: அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் விரைவில் தாய் கழகத்தில் இணைவார்கள் என்றும், முதலமைச்சர் விஜய்யின் 'கொத்து புரோட்டா' பேச்சு நியாயமற்றது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், 'அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் அனைவரும் விரைவில் மண்ணைக் கவ்வப் போகிறார்கள். சிலர் எடப்பாடி பழனிச்சாமியின் துரோகம் செய்துவிட்டு, அதிமுகவை வைத்து பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டு வெளியேறியுள்ளனர். ஆனால், அவர்கள் தாய் கழகத்தில் மீண்டும் இணையும் காலம் விரைவில் வரும். அதிமுகவின் உண்மை தொண்டர்கள் ஒருபோதும் கட்சி மாற மாட்டார்கள். சிலர் தவெகவில் இணைந்துள்ளதாக கூறுவது முற்றிலும் பொய்' என்று தெரிவித்தார்.
மேலும், 'தவெகவின் ஆட்டம் முடிவுக்கு வரப் போகிறது. அவர்களின் வெற்றி நிலையான வெற்றி கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். தவெகவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்திருந்தால், 150 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், வெறும் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணியின் வெற்றியை வைத்து ஆட்சி அமைத்துள்ளார்கள்' என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
முதலமைச்சர் விஜய்யின் பேச்சு குறித்து பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, 'மேயராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலினை 'கொத்து புரோட்டா' போடுவோம் என முதலமைச்சர் விஜய் பேசுவது எந்த வகையில் நியாயம்? ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி நிலைக்காது. விரைவில் அவருக்கு கோபம் வரும். நானும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். ஆனால், அவரை ஒருபோதும் அவமானமாகப் பேசியதில்லை' என்று குறிப்பிட்டார்.
திமுகவை 'மத யானைக்கு நிகரானது' என்று குறிப்பிட்ட ராஜேந்திரபாலாஜி, 'எங்களை பார்த்து தூர்ந்து போன சக்தி என கூறுவது சரியல்ல. தவெக-வுக்கு வாக்களித்த மக்களே இப்போது யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் அமல்படுத்தப்பட்டால், தவெக ஆட்சி மூன்றாண்டுகள் மட்டுமே நீடிக்கும்' என்றும் அவர் கூறினார்.
முதலமைச்சர் பொறுப்பில் உள்ளவர் தார்மீகத்துடன் பேச வேண்டும் என்றும், இதற்கு முன்னர் எந்த முதலமைச்சரும் விஜய் போல் யாரையும் வசைபாடியதில்லை என்றும் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். 'தவறு செய்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கட்டும். ஒரு முதலமைச்சரே இப்படி பேசுவது பழிவாங்கும் நடவடிக்கை என்பதை காட்டுகிறது. தவெக தலைவர் விஜய்யின் பேச்சை யாரும் ரசிக்கவில்லை' என்று அவர் தனது பேச்சை நிறைவு செய்தார்.

