விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதுக்கோட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 'துரோகி விஜயபாஸ்கர் ஒழிக' என கோஷமிட்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் பதவியை சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்த நிலையில், புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து, மக்களுக்கு லட்டு வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அதிமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக ஏற்கனவே 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்திருந்த நிலையில், சி.விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் சரிந்துள்ளது. 47 ஆக இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை தற்போது 42 ஆக குறைந்துள்ளது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள விஜயபாஸ்கர் ஓரிரு நாளில் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விராலிமலை எம்.எல்.ஏ பதவியை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பழனிவேல் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 'துரோகி விஜயபாஸ்கர் ஒழிக..' என்றும் அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.