பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1952 ஆம் ஆண்டு 'வளையாபதி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சௌகார் ஜானகி, 'பணம் படுத்தும் பாடு', 'புதிய பறவை', 'நீர்க்குமிழி', 'மகாகவி காளிதாஸ்', 'எதிர் நீச்சல்', 'இரு கோடுகள்', 'உயர்ந்த மனிதன்', 'காவிய தலைவி', 'ரங்க ராட்டினம்', 'தில்லு முல்லு', 'வெற்றி விழா', 'ஹேராம்' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான 'பிஸ்கோத்' திரைப்படம், தமிழில் அவர் கடைசியாக நடித்த படமாகும்.
சௌகார் ஜானகியின் மறைவு, திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
இந்த நிலையில், மறைந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் உடலுக்கு நடிகர் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சௌகார் ஜானகியின் கலைப்பயணம் பலருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.
