செக் மோசடி வழக்கில் பிரபல நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 'களவாணி', 'மஞ்சப்பை', 'கலகலப்பு' போன்ற பல வெற்றிப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் விமல். இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'மன்னர் வகையறா' திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.
'மன்னர் வகையறா' திரைப்படத்தின் தயாரிப்புக்காக, நடிகர் விமலின் நிறுவன மேலாளராக இருந்த சிங்காரவேலன், பைனான்சியர் கோபி என்பவரிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் சுமார் 5 கோடி ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். இந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக, நடிகர் விமலிடம் பல பத்திரங்களில் சிங்காரவேலன் கையெழுத்து பெற்றுள்ளார். மேலும், விமலின் நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, அதனை சிங்காரவேலனே கவனித்து வந்துள்ளார்.
'மன்னர் வகையறா' திரைப்படம் வெளியான பிறகு, எதிர்பார்த்த வருவாய் ஈட்டாததால், பைனான்சியர் கோபிக்கு கடனை திருப்பித் தர சிங்காரவேலன் தாமதம் செய்துள்ளார். இதனால், நடிகர் விமலிடம் பைனான்சியர் கோபி தனது பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். 'மன்னர் வகையறா' படத்திற்காக நடிகர் விமல் வாங்கியதாகக் கூறப்படும் 4.5 கோடி ரூபாய் தொகையில், 3.06 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தவில்லை என கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பைனான்சியர் கோபி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், படத் தயாரிப்புக்காக பெற்ற 3.06 கோடி ரூபாயை, 18% வட்டியுடன் பைனான்சியர் கோபிக்கு உடனடியாக திருப்பிச் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், நடிகர் விமல் நீதிமன்ற உத்தரவின்படி பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, 'மன்னர் வகையறா' படத்திற்காக நடிகர் விமல் வழங்கியதாகக் கூறப்படும் 4.5 கோடி ரூபாய் கடன் தொடர்பான செக், பணமின்றி திரும்பியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த செக் மோசடி வழக்கில் ஈடுபட்டதாகக் கூறி, நடிகர் விமலுக்கு சென்னை நீதிமன்றம் ஒரு ஆண்டு கால சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
எனினும், நடிகர் விமல் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக, அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ஒரு மாத காலத்திற்கு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த தீர்ப்பு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
