புதுச்சேரி பாஜக மாநில பிரச்சாரக் பிரிவு அமைப்பாளராக இருந்த நடிகர் பாண்டி ரவி, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த திடீர் முடிவு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதால் விலகுவதாக பாண்டி ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் பிரபலமான முகமான இவர், விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார். கடந்த 39 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியுடன் பயணித்து வந்த இவர், தற்போது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த பாண்டி ரவி, '1987 முதல் என் தந்தையைப் பின்பற்றி பாஜகவில் பயணித்து வருகிறேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், மாநில பிரச்சாரப் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகிக் கொள்கிறேன்' என்று கூறினார். மேலும், 'என்னுடைய தகுதி, அனுபவம், மக்கள் தொடர்பு ஆகியவற்றை பாஜக சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பாண்டிச்சேரியில் 10 லட்சம் பேரில் 7 முதல் 8 லட்சம்பேருக்கு என்னை தெரியும். எந்தப் பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இருக்கவில்லை, ஆனால் என்னால் இன்னும் நிறைய செய்ய முடியும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை' என வருத்தத்துடன் தெரிவித்தார்.
'எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். தேர்தல் பிரச்சாரங்களில் கடுமையாக உழைத்தேன். தேர்தல் முடிந்த பிறகு கட்சிக்காக இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கான வழிகள் இல்லாதது என்னை ஏமாற்றமடையச் செய்தது' என்றும் அவர் குறிப்பிட்டார். பாண்டி ரவி விரைவில் தவெக-வில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.