இன்று ஆனி அமாவாசை தினமாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் பன்னிரண்டு ஆண்டுகள் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மறைந்த முன்னோர்களுக்கு முறையாக பித்ரு தர்ப்பணம் செய்வதால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகிவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த ஆனி மாத அமாவாசை தினத்தில், ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்வதற்கு ராகு காலம், எமகண்டம் ஆகியவை பொருந்தாது என்றும், மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்த நேரம் என்றும் கூறப்படுகிறது.
தர்ப்பணம் கொடுக்கும்போது, தங்களின் கோத்திரம், குலதெய்வம் மற்றும் மூன்று தலைமுறைகளின் பெயர்களை அறிந்து சொல்வது அவசியம். தர்ப்பணம் செய்த பிறகு, வீட்டுக்குத் திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, தெற்குப் பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சாற்ற வேண்டும்.
முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்தமான இனிப்பு, கார வகைப் பலகாரங்கள் மற்றும் பழ வகைகளை வைத்து குத்து விளக்கு ஏற்றி, தலைவாழை இலையில் படையல் போட்டு வணங்க வேண்டும். மேலும், இன்று கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுக்களுக்கு தானமாக வழங்கலாம்.
தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னரே தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைத் தொடரலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். வெங்காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
புராணங்களின்படி, தர்ப்பைப் புல்லில் செய்யப்படும் தர்ப்பணங்களை ஸ்வதா தேவி எடுத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. பித்ரு வழிபாட்டில் கருப்பு எள்ளும், புனிதம் நிறைந்த தர்ப்பைப் புல்லும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை இரண்டும் உயர்ந்த சக்தி கொண்டவை.
எள், மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. தர்ப்பணம், சிரார்த்தம் செய்யும்போது கருப்பு எள்ளை பயன்படுத்தினால் பித்ருக்கள் முழு திருப்தி அடைகிறார்கள் என்பது நம்பிக்கை. தர்ப்பைப் புல் ஆகாயத்தில் இருந்து தோன்றிய தாவரம் என்றும், இதன் சக்தியை மேலை நாட்டவர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் உணர்ந்தார்கள் என்றும், ஆனால் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தர்ப்பைப் புல்லுக்கு பூஜைகளில் முதன்மை இடம் கொடுத்து பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
தர்ப்பைப் புல்லின் இரு பக்கங்களில் பிரம்மாவும் சிவனும், நடுவில் மகாவிஷ்ணுவும் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் தர்ப்பைப் புல்லுக்கு மந்திர சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை அதிகமாகிறது. கண்களுக்குத் தெரியாத ஒளி வடிவில் வரும் மூதாதையர்கள் தர்பைப் புல்கள் மீதுதான் அமர்வார்களாம். எனவேதான் தர்ப்பைப் புல்லைத் தொடும்போது மானசீகமாக முன்னோர்களை வணங்கிவிட்டுத் தொட வேண்டும் என்கிறார்கள். பித்ருக்களுக்குக் கொடுக்கும் நீர் தர்ப்பணங்கள் அவர்களுக்கு நேரடியாகச் சென்றடையவும் தர்ப்பை புல்லே உதவியாக உள்ளது.
ஆனி மாதம் இறை வழிபாட்டிற்குச் சிறப்பான மாதமாகும். இந்த ஆனி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் தந்து நமது முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சுப விஷயங்கள் பெருகும். தாமதமாகும் திருமணம் விரைவில் நடக்கும். வீண் பண விரயங்கள் நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
