தமிழகத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக த.வெ.க. வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தி பரவலாக எழுந்துள்ளது. ஆளும் கூட்டணியின் ஆதரவாளர்களுக்கே இந்த பதவிகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற அமர்வை சேர்த்து, அரசு தலைமை வழக்கறிஞர், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர், அரசு சிறப்பு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், உரிமையியல் மற்றும் குற்றவியல் அரசு வழக்கறிஞர்கள் என மொத்தம் 180 அரசு வழக்கறிஞர் பதவிகள் உள்ளன. வழக்கமாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களே இந்தப் பதவிகளில் நியமிக்கப்படுவார்கள்.
தற்போது, தலைமை அரசு வழக்கறிஞராக விஜய் நாராயணன், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஜான் சத்யன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக பி.வி.பாலசுப்ரமணியம், டி.கவுதமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. இதில், விஜய் நாராயணன் அதிமுக ஆட்சியில் 2017 முதல் 2021 வரை தலைமை அரசு வழக்கறிஞராகவும், பாலசுப்ரமணியம் மற்றும் கவுதமன் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாகவும் பணியாற்றியுள்ளனர். அதிமுக ஆட்சியில் இருந்தவர்களையே த.வெ.க. ஆட்சியிலும் நியமித்தது த.வெ.க. வழக்கறிஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து த.வெ.க. வழக்கறிஞர்கள் கூறுகையில், 'கடந்த கரூர் மாநாட்டில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் நடிகர் விஜய் விமர்சிக்கப்பட்டபோது, அவரை த.வெ.க. வழக்கறிஞர் அணிதான் பாதுகாத்தது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த 217 த.வெ.க.வினரும், திமுக ஆட்சியில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 5,328 த.வெ.க.வினரும் பின்னர் ஜாமீனில் வெளிவர த.வெ.க. வழக்கறிஞர் அணிதான் உதவியது. இவ்வாறு கட்சிக்கு உழைத்த வழக்கறிஞர்களுக்கு உரிய பதவிகள் வழங்காமல், அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு பதவி வழங்குவது சரியல்ல. எனவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் நடிகர் விஜய் தலையிட்டு, கட்சிக்கு உழைத்த வழக்கறிஞர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளனர்.