பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், வங்கதேசத்தில் இரண்டு எருமை மாடுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோரின் பெயர்களைக் கொண்ட இந்த எருமைகள், அவற்றின் தனித்துவமான குணாதிசயங்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
டாக்கா நகரில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் 'டொனால்டு டிரம்ப்' என்ற அல்பினோ வகை எருமை, சுமார் 700 கிலோ எடை கொண்டது. இதன் வெளிர் நிறத் தோலும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நினைவுபடுத்தும் சிகை அலங்காரமும் இதற்கு இந்தப் பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. பண்ணை உரிமையாளர் ஜியாவுதீன் மிருதா கூறுகையில், 'டிரம்ப் எருமை உருவத்தில் சற்று வித்தியாசமாக இருந்தாலும், குணத்தில் மிகவும் சாந்தமானது' என்று தெரிவித்தார்.
மறுபுறம், நாராயணகஞ்ச் பகுதியில் உள்ள மற்றொரு பண்ணையில் வளர்க்கப்படும் 750 கிலோ எடையுள்ள எருமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'டிரம்ப்' எருமையைப் போலல்லாமல், இந்த நேதன்யாகு எருமை மிகவும் ஆக்ரோஷமான குணாதிசயம் கொண்டது. பண்ணை மேலாளர் ஒருவர் கூறுகையில், 'இது ஒரு குறும்புக்கார எருமை, மிகுந்த தந்திரசாலித்தனம் கொண்டது' என விவரித்துள்ளார்.
பண்டிகை காலம் நெருங்கி வருவதால், இந்த விசேஷ எருமைகளைக் காணவும், அவர்களுடன் செல்ஃபி எடுக்கவும் ஏராளமான மக்கள் பண்ணைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த அசாதாரண நிகழ்வு, பக்ரீத் பண்டிகைக்கு மேலும் ஒரு சுவாரஸ்யமான அம்சத்தைச் சேர்த்துள்ளது.