ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியுள்ளது. தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு, தொடக்க வீரர் ஜேக்கப் பெத்தேல் 11 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், கேப்டன் கோலியுடன் இணைந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் கோலி 58 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 73 ரன்கள் குவித்து அசத்தினார். இவர்களுக்குப் பிறகு வந்த டிம் டேவிட்டின் அதிரடியால், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதே சமயம் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால், அவர்களும் ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்வார்கள். எனவே இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
தர்மசாலாவில் நடைபெறும் இந்த முக்கிய போட்டியில், பெங்களூரு அணியின் அதிரடி பேட்டிங்கால் நிர்ணயிக்கப்பட்ட 223 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி எட்டுமா அல்லது பெங்களூரு அணி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.