2027 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் திட்டங்கள் குறித்து இந்திய கேப்டன் கில் பேசியபோது, ரோஹித் சர்மாவின் பெயரை குறிப்பிடாமல் விட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதன் மூலம், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெற மாட்டார் என்பதை கில் மறைமுகமாக உணர்த்திவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 39 வயதான ரோஹித் சர்மா 47 பந்துகளில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான தடுமாற்றம் அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய கேப்டன் கில், 'ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருந்துள்ளனர். இந்திய அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் திறமையும் அனுபவமும் எங்களுக்கு விலைமதிப்பற்றது' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உலகக் கோப்பைக்கான காம்பினேஷன் குறித்து பேசிய கில், 'எந்த காம்பினேஷன் சரியாக இருக்குமோ, எந்த வீரர்கள் சரியான தேர்வாக இருப்பார்களோ அதை வைத்து தான் நாங்கள் முடிவு எடுக்க முடியும். தற்போது அணியில் இல்லாத வீரர்கள் கூட மீண்டும் வரலாம்' என்று கூறியிருந்தார்.
இந்த பேட்டியின்போது, விராட் கோலியின் பெயரை கில் பலமுறை குறிப்பிட்டாலும், ரோஹித் சர்மாவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், 'கில் அளித்த பேட்டியை பார்த்தோம். 2027 உலகக் கோப்பை பற்றி பேசும்போது அவர் விராட் கோலியின் பெயரையே திரும்பத் திரும்பச் சொன்னார். ஆனால், ரோஹித் சர்மாவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. இதன் மூலம் இந்தியாவின் உலகக் கோப்பை திட்டத்தில் ரோஹித் சர்மா இல்லை என்பது தெளிவாகி இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், 'ரோஹித் சர்மாவுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு சாதனைகளை செய்தும் அவருக்கு அழுத்தம் தருவது உண்மையில் வேதனையாக இருக்கின்றது. யார் வேண்டுமானாலும் அவர் இடத்திற்கு வரலாம். ஆனால் அவர்கள் ரோஹித் இடத்தை பிடிக்க நீண்ட நாட்கள் ஆகலாம். ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஒரு தலைமுறைக்கான வீரர்கள்' என்றும் தெரிவித்தார்.
'நான் இன்னும் ஒரு விஷயத்தை நினைவு கூற விரும்புகிறேன். இந்திய அணி தோனியை இன்னும் மாற்றக்கூடிய வீரரை கண்டுபிடிக்கவில்லை' என்றும் சடகோபன் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். கில்லின் இந்த கருத்து, ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
