புதுச்சேரி மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசினார். மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கூட்டணியில் ஏற்பட்ட குழப்பங்களே இந்தத் தோல்விக்குக் காரணம் என்றும், இதற்கான பொறுப்பை தானும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். முதல்வர் பதவியேற்பில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்றும், ஆனால் ஆளுநர்களின் தலையீட்டால் அது தாமதமாகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய நாராயணசாமி, புதுச்சேரியில் முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகள் இழுபறியிலேயே நீடிப்பதாகக் கூறினார். அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி வரை பேரம் பேசப்படுவதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், ஊழல் மலிந்த இந்த ஆட்சி எப்படி செயல்படும் என்ற கேள்வியையும் எழுப்பினார். இதனால்தான் அமைச்சர்கள் பதவியேற்பு தாமதமாவதாகவும், இது குறித்து முதல்வர் ரங்கசாமி அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நண்பரான ரங்கசாமி, விஜய் பாணியில் ஊழலற்ற ஆட்சியைத் தருவாரா என்ற கேள்வியையும் நாராயணசாமி முன்வைத்தார். ஆரம்பத்திலேயே அமைச்சர் பதவிக்கு ஏலம் போவது புதுச்சேரிக்கு நல்லதல்ல என்றும், பண பலத்தால் தேர்தலில் வென்று அமைச்சராக கனவு காண்பவர்கள் டெல்லிக்கும் புதுச்சேரிக்கும் காவடி தூக்குவதாகவும் கடுமையாகச் சாடினார். தற்போது போதை மாநிலமாக இருக்கும் புதுச்சேரி, சூதாட்ட மாநிலமாக மாறிவிடக்கூடாது என்றும் எச்சரித்தார்.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த நாராயணசாமி, இது குறித்து காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவில் ஆலோசிக்கப்படும் என்றும், பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து அகில இந்திய தலைமை முடிவெடுக்கும் என்றும், தனிப்பட்ட நிலைப்பாடுகளுக்கு இங்கு இடமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தமிழகத்தில் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளோம் என்றும், காங்கிரஸுக்கும் தவெகவுக்கும் நல்ல நட்புறவு இருப்பதாகவும், இதன் அடிப்படையில் புதுச்சேரியிலும் கட்சித் தலைமையின் முடிவுக்கு ஏற்ப செயல்படுவோம் என்றும் கூறினார்.