விருதுநகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், 'இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி வாக்குகளைப் பெற முடியும் என்பதை வெளிநாடுகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது அது தமிழகத்திலும் நடந்துள்ளது. 2026 தேர்தல் முடிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்த 'விஜய் சுனாமி'யால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். தேர்தலில் நாம் இழந்தது வெறும் வெற்றி வாய்ப்பை மட்டும்தான்.
நடிகர் விஜய் பெற்ற வாக்குகள் அனைத்தும் அதிமுகவின் வாக்குகள் தான். திமுகவின் வாக்குகள் அப்படியே திமுகவிற்கே சென்றன. ஈபிஎஸ் பொதுச்செயலாளராக வந்து கட்சியை சிறப்பாக வழிநடத்துவது காலத்தின் கட்டாயம். கட்சியில் உள்ள விரிசல்களை கட்சித் தலைமை நிச்சயம் சரிசெய்யும். ஈபிஎஸ் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று 1 கோடியே 30 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர்.
அதிமுகவை மக்கள் எளிதில் கைவிட்டுவிட மாட்டார்கள். அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே கட்சியை நடத்த முடியும் என்ற நிலை தற்போது அதிமுகவுக்கு இல்லை. சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களை ஈர்த்து, அவர்களின் வாக்குகளைப் பெறுவது முக்கியம். தேர்தல் முடிவுகள் எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. இதனைக்கொண்டு அடுத்த தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும்.
அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், நிச்சயம் அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க முடியும். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். நமது பலம் தொண்டர்கள்தான். அவர்களை அரவணைத்துச் செல்வதே நமது கடமை. வரும் காலங்களில் நாம் ஒற்றுமையுடன் செயல்படுவோம்.