இந்தியர்களின் கலாச்சாரத்தில் தங்கம் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. அதன் மீதான மோகம் ஒருபோதும் குறையவில்லை. இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தாக்கம் எதிரொலித்துள்ளது.
தற்போது நிலவும் சர்வதேச சூழல், குறிப்பாக அமெரிக்க-ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள், கச்சா எண்ணெய் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா அதிக அளவில் டாலர்களைச் செலவிட வேண்டியுள்ளது. எரிசக்தி மற்றும் தங்கத் தேவைகளுக்கு இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் இந்தியா, அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாக குறைவதைக் கண்டுள்ளது.
இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், அத்தியாவசியமற்ற இறக்குமதிகளாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை அரசு உயர்த்தியுள்ளது. இதற்கிடையே, வெள்ளி இறக்குமதி மீது விதிக்கப்பட்ட இரட்டை வரி உயர்வைத் தொடர்ந்து, குறிப்பிட்ட வெள்ளிக் கட்டிகளின் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 99.9 சதவீத தூய்மையான வெள்ளிக் கட்டிகள் இறக்குமதி இனி கட்டுப்படுத்தப்பட்ட பிரிவின் கீழ் வரும். இதற்கு அரசின் முறையான உரிமம் அல்லது அனுமதி கட்டாயம் தேவைப்படும். உள்நாட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தேவைப்பட்டால் மட்டுமே இந்த உரிமம் வழங்கப்படும். இதனால், உள்நாட்டில் வெள்ளி விலை உயரக்கூடும் என்றும், நகை மற்றும் மின்னணு துறைகளில் வெள்ளி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வர்த்தக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த நிதியாண்டில் வெள்ளியின் இறக்குமதி மதிப்பு இரண்டரை மடங்கு உயர்ந்து 12.1 பில்லியன் டாலராகவும், அளவு அடிப்படையில் 42% உயர்ந்து 7,335 டன்களாகவும் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.