நடிகர் ரவிமோகனின் கண்ணீர் பேட்டி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரைப் போன்றே, குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவாக 'தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம்' உறுதுணையாக நிற்கும் என அதன் தலைவர் வழக்கறிஞர் அருள் துமிலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், 'குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களுக்காக மாநில அரசு ஒரு ஹெல்ப்லைன் எண்ணை உடனடியாக அமைக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
குடும்ப வன்முறை என்பது வெறும் உடல்ரீதியான தாக்குதல்கள் மட்டுமல்ல. மனரீதியான துன்புறுத்தல்கள், பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகள், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துதல், ஏன் சொந்தக் குழந்தைகளைப் பார்ப்பதற்குக் கூடத் தடை விதிப்பது போன்ற கொடூரமான வழிகளிலும் ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர். நடிகர் ரவிமோகன் தனது குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை என்று கண்ணீருடன் கூறியபோது, 'குழந்தைகளின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே தந்தையின் கடமை' என்று அவரது மனைவி தரப்பு கூறிய பதில் மிகவும் கண்டிக்கத்தக்கது.
துரதிர்ஷ்டவசமாக, குடும்ப வன்முறையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2024ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் சுமார் 10,000 குடும்பத் தலைவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில், 38.4% குடும்பப் பிரச்சனைகளால் நிகழ்கின்றன. இருப்பினும், கடன், உடல்நலப் பிரச்சனைகள், தொழில் பின்னடைவு போன்ற காரணங்களால் திசைதிருப்பப்படும் தற்கொலைகளுக்குப் பின்னால், குடும்ப வன்முறையும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.
சமீபத்தில் கன்னியாகுமரி அகஸ்டின் ஜோசப், சென்னை மணிகண்டன், நெல்லை சுதாகர், தருமபுரி தினேஷ் போன்றோர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் மனதை உலுக்குகின்றன. இது வெளிப்படையாகத் தெரிந்த சில சம்பவங்கள் மட்டுமே. பலர், தங்களுக்கு நேரும் கொடுமைகளை வெளிப்படுத்த முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கின்றனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆண்களுக்கான ஹெல்ப்லைன் வசதி உள்ளது. இந்தியாவிலேயே முன்னோடியாக, தமிழகத்தில் இதுபோன்ற ஹெல்ப்லைன் வசதியை ஏற்படுத்தி, குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களின் உயிரைக் காக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.