திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் கடத்தல்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், துபாய் போன்ற நாடுகளுக்குச் செல்லும் விமானங்களிலும், அங்கிருந்து திருச்சிக்கு வரும் விமானங்களிலும் தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனிடையே, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த விமானத்தில், பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவரைத் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்ததில், அவரது உடமைகளில் இருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள, ஹைட்ரோபோனிக் ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கஞ்சா கடத்த முயன்ற அந்தப் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் திருச்சி விமான நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.