நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், வேதியியல் மற்றும் தாவரவியல் பேராசிரியர்கள் முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) சார்பில் நாடு முழுவதும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் இருந்து பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் தலா 3 கேள்விகளை வரையறுத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நீட் தேர்வுக்கும் இரு வகையான வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. முக்கிய வினாத்தாள் அந்தந்த மாநிலங்களில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி பாதுகாப்பு பெட்டகங்களிலும், மற்றொரு வினாத்தாள் கனரா வங்கி பாதுகாப்பு பெட்டகங்களிலும் வைக்கப்படும். கடந்த 3-ம் தேதி நடந்த தேர்வின் போது, எஸ்.பி.ஐ வங்கி பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்த வினாத்தாள்களே வழங்கப்பட்டன. ஆனால் அன்றைய தினமே வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் உள்ள நீட் பயிற்சி மைய ஆசிரியர் ஒருவர் உள்ளூர் போலீஸ் நிலையத்திலும், தேசிய தேர்வு முகமைக்கும் புகார் அளித்தார். இதன் விசாரணையில், நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது வரை இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிபிஐ விசாரணையில், ராஜஸ்தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தினேஷ் பிவால், அவரது சகோதரர்கள் மங்கிலால் பிவால், விகாஷ் பிவால் ஆகியோர் லட்சக்கணக்கில் வினாத்தாளை விற்று MBBS படிக்கும் உறவினர்களுக்கு வழங்கியது தெரியவந்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த மணிஷா, நாசிக் நகரைச் சேர்ந்த சுபம் காரினார், புனேவைச் சேர்ந்த ஏஜென்ட் தனஞ்செய் லோகாண்டே, ஹரியானா குருகிராமின் ஆயுர்வேத மாணவர் யாஷ் யாதவ் என பலரும் வினாத்தாள் விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களால் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா, காஷ்மீர், பீகார், டெல்லி, உத்தரகாண்ட், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிந்துள்ளது.
இந்த விவகாரத்தில், வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னி மற்றும் தாவரவியல் பேராசிரியை மணிஷா குருநாத் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு பேராசிரியர்கள் மூலமாகவே வினாத்தாள் கசிந்திருக்கலாம் என்றும், இவர்களுக்கும் என்.டி.ஏ. மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.