சென்னை: '96', 'மெய்யழகன்' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் சி. பிரேம்குமார் தனது அடுத்த படைப்பை அறிவித்துள்ளார். இந்த புதிய திரைப்படம் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளது.
இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர் பகத் பாசில் மற்றும் நடிகை ஸ்ஷிவாதா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஐசரி கணேஷ் வழங்கும் இந்த திரைப்படத்தை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் மான்சூன் மூவிஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றன.
நடிகர் வடிவேலுவுடன் 'மாரீசன்' படத்தில் நடித்திருந்தாலும், பகத் பாசில் தமிழில் தனி ஒரு நாயகனாக நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் இதுவாகும். மேலும், சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன் போன்ற திறமையான நடிகர்களும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மகேஷ் நாராயணன் இயக்கிய 'பேட்ரியாட்' படத்தில் பகத் பாசிலும் ஸ்ஷிவாதாவும் ஏற்கெனவே இணைந்து நடித்திருந்தாலும், முதன்மை கதாபாத்திரங்களில் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை. இதனிடையே, ஸ்ஷிவாதா சமீபத்தில் சமுத்திரக்கனியுடன் 'தடயம்' என்ற வெப் சீரிஸிலும், நடிகர் சூர்யா நடித்த 'கருப்பு' படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.