மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி கிராமத்தில் அமைந்துள்ள ஐந்து கோவில் முத்தன் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பெரிய நாகினி கண்மாயில், விவசாய அறுவடை முடிந்ததை அடுத்து, ஆண்டுதோறும் நடத்தப்படும் சமத்துவ மீன்பிடித் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான மீன்பிடித் திருவிழாவில், கள்ளந்திரி, அழகர்கோவில், வலையப்பட்டி, மாங்குளம், மீனாட்சிபுரம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிகாலையிலிருந்தே கண்மாய் கரையில் குவிந்திருந்தனர். கிராமப் பிரமுகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் சிறப்பு பூஜைகளை முடித்து, மீன்பிடிக்க அனுமதி வழங்கியதும், உற்சாகம் கரைபுரண்டோடியது.
அனுமதி கிடைத்தவுடன், ஆயிரக்கணக்கான மக்கள் கண்மாயில் இறங்கி, தங்களுக்குச் சொந்தமான வலைகள் மற்றும் ஊத்தாக்களைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்லா, ரோகு, திலேபியா, விரால் போன்ற பல்வேறு வகையான மீன்கள் அதிகளவில் கிடைத்தன. பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களைப் பிடித்துச் சென்றனர்.
இந்த மீன்பிடித் திருவிழா, கிராம மக்களிடையே ஒற்றுமையையும், சமத்துவத்தையும் வளர்க்கும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகத் திகழ்கிறது. விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தையும், பண்டிகைக் கால உற்சாகத்தையும் இது பிரதிபலிக்கிறது.