தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 38 பேர் கொண்ட திமுக கள ஆய்வுக் குழுவினருடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது, கட்சியினர் சொல்லும் கருத்துக்களை மறைக்காமல் அப்படியே தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார்.
சந்திப்பின்போது, தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சி உறுப்பினர்கள் கூறும் உண்மைகளை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் குழுவினரிடம் வலியுறுத்தினார். யாரையும் காப்பாற்றவோ, பழிவாங்கவோ முயற்சிக்கக் கூடாது என்றும், இருவரும் சேர்ந்தே ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்றும், தனிநபராகச் சந்திக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கட்சியினர் மனம்விட்டுப் பேசவும், தேர்தல் தோல்விக்கான காரணங்களை வெளிப்படையாகக் கூறவும் ஸ்டாலின் அனுமதித்துள்ளார்.
தங்கள் மீது குறை சொன்னாலும் அதைக் குறித்து வைத்து அறிக்கையில் சேர்க்குமாறு ஸ்டாலின் கூறியுள்ளார். நிர்வாகிகளின் உண்மையான உணர்வுகள் மற்றும் கருத்துக்களே தனக்குத் தேவை என்றும், மருத்துவரிடம் நோயைப் பற்றி மறைத்தால் சிகிச்சை பலனளிக்காது என்பது போல, கட்சியினர் தன்னிடம் எதையும் மறைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், கள ஆய்வுக் குழுவினரிடம் கட்சியினர் தெரிவிக்கும் தகவல்கள் வேறு யாரிடமும், குறிப்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் பகிரப்படக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த ஆய்வின் அறிக்கையின் அடிப்படையில்தான் கட்சியில் மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், எனவே அறிக்கை துல்லியமாக இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். ஜூன் 5-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், ஜூன் மாத இறுதிக்குள் இது குறித்த நடவடிக்கைகள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் மூலம் கட்சியை மாற்றியமைத்து, அடுத்த 100 ஆண்டுகளுக்கு திமுகவை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்றும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.