தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கர்ப்பிணிப் பெண் ஒருவரை ஊழியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் வெளியே தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவிலைச் சேர்ந்த கணேசன் என்பவர், தனது கர்ப்பிணி மனைவியுடன் முருகனை தரிசிக்க நேற்று அதிகாலை கோவிலுக்கு வந்துள்ளார். மனைவியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் தரிசனத்திற்காகச் சென்றபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த கோவில் ஊழியர்கள், அவர் கர்ப்பிணியாக இருந்தபோதிலும் பாரபட்சமின்றி தள்ளி வெளியேற்றியுள்ளனர். மேலும், அவர்கள் முகத்திற்கு நேராகவே கோவில் கேட்டைப் பூட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் தம்பதியினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தம்பதியினர் இதுகுறித்து கூறுகையில், 'திருச்செந்தூர் கோவிலில் நீண்ட காலமாக நிலவி வரும் வி.ஐ.பி. கலாச்சாரம், கட்டணக் கொள்ளை போன்ற பிரச்சினைகளுக்குப் புதிய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏழை, எளிய மக்களும், பெண்களும் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை கடுமையான விதிகளை அமல்படுத்த வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் கோவிலில் வி.ஐ.பி.களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, சாதாரண பக்தர்கள் வெயிலிலும், கூட்ட நெரிசலிலும் அவதிப்படும் நிலை தொடர்கிறது. இதனுடன், அர்ச்சகர்களின் அதிகப்படியான கட்டண வசூலும், ஊழியர்களின் பொதுமக்களிடம் நாகரிகமற்ற அணுகுமுறையும் அதிகரித்து வருவதாக பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.