நடிகர் ரவி மோகன், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து உருக்கமான பேட்டி அளித்துள்ளார். தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும், பிள்ளைகளைப் பார்க்க அனுமதி மறுப்பதாகக் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். "என் பிள்ளைகள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும்" என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
இது முற்றிலும் தனிப்பட்ட விஷயம் என்றும், சினிமாவுக்கு இதற்கும் தொடர்பில்லை என்றும் ரவி மோகன் தெரிவித்தார். இத்தனை நாட்கள் அமைதியாக இருந்ததற்கு வருத்தம் தெரிவித்த அவர், தன்னைச் சாதுவாக நினைத்து பலர் சீண்ட நினைப்பதாகவும், ஆனால் 'சாது மிரண்டால் காடு தாங்காது' என்பது போல இனி பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் எச்சரித்தார். தனது அலுவலகத்திற்கு நேரடியாக வரச்சொல்லி, மறைமுகமாகத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
23 ஆண்டுகள் இரவு பகலாக உழைத்து, 95 சதவீத படங்களை வெற்றி பெறச் செய்து, மாநில விருதுகள், கலைமாமணி விருதுகள் பெற்றுள்ளதாகவும் ரவி மோகன் கூறினார். தன் குடும்பத்தைக் காப்பாற்ற கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் இப்போது தன் குழந்தைகளைப் பார்க்கக்கூட அனுமதிக்க மறுப்பதாகவும் வேதனை தெரிவித்தார். பெண்ணுரிமைக்காகவும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் படங்களில் குரல் கொடுத்த தன்னை எப்படி பெண்களுக்கு எதிரானவன் எனச் சொல்ல முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 14 வருட திருமண வாழ்க்கையில் பொறுத்துக்கொண்டது குழந்தைகளுக்காகத்தான் என்றும், இப்போது அவர்களுக்கு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் கட்டிப் படிக்க வைப்பதாகவும் தெரிவித்தார்.
தனக்காகக் கோடிக்கணக்கில் வீடு கட்டி கொடுத்தும், இருக்கும்போது தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளாதவர்கள், இப்போது தன்னை நிம்மதியாக வேலை செய்ய விடாமல் அவதூறுகள் பரப்பி, சைபர் புல்லியிங் செய்வதாக ரவி மோகன் குற்றம் சாட்டினார். தான் தற்போது வாடகை வீட்டில் இருப்பதாகவும், அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வீட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு பெண் மட்டுமே தன்னை உண்மையாகப் புரிந்து கொண்டதாகவும், ஆனால் அவரும் இப்போது துரத்தப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். தனக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், உயிரோடு இருக்கக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம் என்றும், ஆனால் அவர்களை முடித்துவிட்டுத்தான் போவேன் என்றும் ஆவேசமாகப் பேசினார். தனக்கு செய்வினை செய்வதாகவும், அதனால் ரத்த வாந்தி வருவதாகவும் அவர் கூறினார்.