திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இன்று காலை முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பேரிஜம் ஏரி, ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கு செல்ல வனத்துறையினரின் அனுமதி அவசியமாகும். ஏரிக்குச் செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதிப் பள்ளத்தாக்கு போன்ற அழகிய இடங்களும் அமைந்துள்ளன. ஆனால், தற்போது புலிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால், இந்த இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திடீரென விதிக்கப்பட்ட இந்த தடையால், பேரிஜம் ஏரிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பலரும் நீண்ட தூரம் பயணித்து வந்த நிலையில், இந்த அறிவிப்பால் வருத்தம் அடைந்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், 'புலிகளின் நடமாட்டத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவை பாதுகாப்பான வனப்பகுதிக்குள் சென்ற பிறகு, சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க பரிசீலிப்போம்' என்று தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.