அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன.
இந்த எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை சமாளிக்க, பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், அவசரத் தேவைக்கு மட்டும் குழுவாக இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, எரிபொருளை சேமிக்கும் நோக்கில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெட்ரோல் பங்க்குகளை மூட இந்திய பெட்ரோலியம் டீலர்கள் சங்க செயற்குழு முடிவு செய்துள்ளதாகவும், இந்த நடைமுறை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஹரியானா மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவியது.
இந்தத் தகவல் காட்டுத்தீ போல பரவி, பலரால் பகிரப்பட்டு விமர்சனங்களுக்கும் உள்ளானது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசு ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) தனது சமூக வலைத்தளப் பதிவில், 'ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.