சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், 'போராளி ஓய்வதில்லை' என்ற தலைப்பில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், 'நமது தலைவர் கருணாநிதி அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் அயராது உழைத்தவர். அவர் காட்டிய வழியில்தான் திமுக எப்போதும் பயணிக்கும். ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எப்போதும் மக்களோடு மக்களாக நிற்கும் இயக்கம் திமுக மட்டுமே' என்று குறிப்பிட்டார்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்து நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு வருகிறேன். சேகர்பாபு என்னை கோபமாக இருப்பதாக நினைத்திருக்கலாம். அது கோபம் அல்ல, வருத்தம். அவர் மீதும், அவர் மாவட்டத்தின் மீதும் எனக்கு இருக்கும் உரிமையான வருத்தம் அது. திமுகவின் தோல்விக்கு பல காரணங்களை நாம் கூறி சமாதானம் அடையலாம். ஆனால் கொளத்தூர் தொகுதியின் தோல்வியை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்று காட்ட வேண்டும்.
தற்போதைய ஆட்சியாளர்கள் நமது தயவில்தான் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள். 'மாற்றம் மாற்றம்' என்று கூறி ஆட்சிக்கு வந்து, தற்போது மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே தந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் பிரச்சனைகளை சட்டப்பேரவையில் நாம் எழுப்பினால், முதல்வர் அவற்றுக்கு பதில் சொல்வதில்லை. எந்த துறையைப் பற்றி கேள்வி கேட்டாலும், மூன்று அமைச்சர்கள் மட்டுமே பதில் சொல்கிறார்கள். மின் கட்டணம் பற்றி பேரவையில் கேள்வி எழுப்பினால், பதில் சொல்ல முடியாத மின்சாரத்துறை அமைச்சர் வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்.
பொதுவாக, சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினரை பார்த்து எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்பார்கள். ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியைப் பார்த்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றிலேயே முதல் முறையாக, ஆளுங்கட்சியினர் பேசுவதைத்தான் சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறார்.
முதலமைச்சர் நம்மை மிரட்டுகிறாராம். அவரிடம் மூன்று கோப்புகள் இருக்கிறதாம். அதைத் திறக்க வைத்துவிடாதீர்கள் என முதலமைச்சர் கூறுகிறார். தயவுசெய்து அந்த கோப்புகளைத் திறங்கள். யார் உங்களைத் திறக்க வேண்டாம் என்று சொன்னது? இப்போது நான் சொல்கிறேன். தைரியம் இருந்தால் அந்த கோப்புகளைத் திறந்து காட்டுங்கள் பார்ப்போம்.
இப்போது இருக்கும் முதலமைச்சருக்கு, யார் எந்த தொகுதி எம்எல்ஏ என்றே தெரியாது. யார் எந்த துறைக்கு அமைச்சர் என்றும் அவருக்குத் தெரியாது. இந்த லட்சணத்தில் இவர் எல்லா எம்எல்ஏக்களுக்கும் கார் வாங்கி கொடுக்கப் போகிறாராம். திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் என்று சொன்னால், அதையும் ஒரு அமைச்சர் கிண்டல் செய்கிறார்.
மக்களை மதிக்காத இந்த தவெக அரசுக்கு சரியான பாடத்தை நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். சரியான நேரத்தில் நீங்கள் அதை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்' என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
