சர்க்கரை விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால், தேநீர் மற்றும் காபி விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சர்க்கரை விலை கிலோவுக்கு சுமார் 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, 50 கிலோ வெள்ளை சர்க்கரை மூட்டையின் விலை 2,150 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ சர்க்கரையின் விலை 44 ரூபாயிலிருந்து 68 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுமட்டுமின்றி, வெல்லத்தின் விலை 55 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், நாட்டு சர்க்கரையின் விலை 55 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி குறைவு, பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், பண்டிகை கால தேவைகள் அதிகரிப்பு, உலகளாவிய சந்தையில் நிலவும் பற்றாக்குறை மற்றும் சர்க்கரை பதுக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்துள்ள இந்த சூழலில், தேநீர், காபி மற்றும் பல்வேறு இனிப்பு வகைகளின் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். இது நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், சர்க்கரையின் சில்லறை மற்றும் மொத்த விலைகள் சுமார் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. சில மாநிலங்களில் இந்த விலை உயர்வு 50 சதவீதம் வரை கூட எட்டியுள்ளது.
குறிப்பாக, உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் ஒரு கிலோ சர்க்கரையின் விலை 65 ரூபாயைத் தாண்டியுள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவரப்படி, ஒடிசாவில் ஒரு கிலோ சர்க்கரையின் விலை 67 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திடீர் விலை உயர்வு, சாமானிய மக்களின் அன்றாட செலவுகளை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீக்கடைகள் மற்றும் இனிப்புக் கடைகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை விலை உயர்வுக்கு உரிய நடவடிக்கை எடுத்து, விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
