கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! ஈரோட்டில் இருந்து கோவைக்கு அரசு பேருந்தில் சென்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியரான லட்சுமி (70 வயது) அவர்களிடம், சக பயணியாக வந்த பெண் ஒருவர் சாக்லேட் கொடுத்து மயக்கி, கழுத்தில் இருந்த 6.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சுமி, தனது மகனைப் பார்ப்பதற்காக ஈரோட்டில் இருந்து கோவைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த அவருக்கு அருகில் மற்றொரு பெண் அமர்ந்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், அருகில் அமர்ந்திருந்த பெண் தனது பையில் இருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து லட்சுமிக்கு கொடுத்துள்ளார். தானும் ஒரு சாக்லேட்டை சாப்பிட்டுள்ளார். இதை நம்பி லட்சுமியும் அந்த சாக்லேட்டை வாங்கியுள்ளார்.
சாக்லேட்டை சாப்பிட்ட சிறிது நேரத்தில் லட்சுமிக்கு மயக்கம் வருவது போல் இருந்துள்ளது. மீதி சாக்லேட்டை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்துள்ளார். பின்னர் தண்ணீர் குடிக்க முயன்றபோது, அந்த பெண் கொடுத்த தண்ணீரைக் குடித்ததும் லட்சுமி முழுவதுமாக மயங்கி விழுந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அந்த பெண் லட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 6.5 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு, பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றபோது இறங்கி ஓடிவிட்டார்.
மயக்க நிலையில் இருந்த லட்சுமியை பேருந்து நடத்துநர் கவனித்து, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிகிச்சை பெற்று கண் விழித்த லட்சுமி, தனது கழுத்தில் நகை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சாக்லேட் கொடுத்து மூதாட்டியை மயக்கி நகை திருடிய அந்த மர்மப் பெண்னை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.