சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால், டீ, காபி முதல் இனிப்பு வகைகள் வரை அனைத்து பொருட்களின் விலையும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நாடு முழுவதும், குறிப்பாக மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களில், கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை, கட்டுப்படியாகாத விலை, வேலையாள் கூலி உயர்வு போன்ற காரணங்களால் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் இருந்து பின்வாங்குகின்றனர். வழக்கமாக ஐந்து கோடி ஏக்கரில் நடக்கும் கரும்பு சாகுபடி, தற்போது பல மாநிலங்களில் குறைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான கரும்பை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அண்டை மாநிலங்களை நம்பி இருக்க வேண்டியுள்ளது. கரும்பு உற்பத்தி குறைந்ததன் காரணமாக, பல சர்க்கரை ஆலைகள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.
சர்க்கரை உற்பத்தி குறைந்ததால், அதன் விலை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. தற்போது ஓணம், விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, துர்கா பூஜை, தீபாவளி என பண்டிகை காலம் துவங்கியுள்ளது. பண்டிகைக் காலங்களில் சர்க்கரையின் தேவை அதிகரிக்கும் என்பதால், அதன் விலை மேலும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
உற்பத்தி குறைவை சாதகமாக்கிக் கொண்டு, விலையை மேலும் ஏற்றுவதற்காக, நாடு முழுவதும் உள்ள ஆன்லைன் மொத்த வர்த்தகர்கள் சர்க்கரையை பதுக்கி வைப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வு மேலும் தீவிரமடைந்துள்ளது.
சென்னையில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை கிலோ 47 ரூபாய்க்கு விற்கப்பட்ட சர்க்கரை, தற்போது 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் இந்த விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி இல்லாததால், வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. வாகன வாடகை, ஏற்றி இறக்கும் கூலி போன்ற செலவுகள் அதிகரித்துள்ளன. இந்த கூடுதல் செலவுகளைக் காரணம் காட்டி, மொத்த வியாபாரிகள் சர்க்கரை விலையை உயர்த்தி வருகின்றனர்.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரை சர்க்கரை விலை குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. சர்க்கரை விலை உயர்வால், கடைகளில் டீ, காபி விலையும் அதிகரித்துள்ளது. இது தவிர, இனிப்பு வகைகள் மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
