பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி அன்று சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூரில் அவர் சொந்தமாக கட்டி வந்த வீட்டை பார்வையிட சென்றபோது, மர்ம கும்பலால் வெட்டி சாய்க்கப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவேங்கடம், காவல்துறையின் என்கவுன்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கு விசாரணை அதிகாரியாக இருந்த உதவி கமிஷனர் சரவணன், 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மொத்தம் 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களில் திருவேங்கடம் மற்றும் பிரபல தாதா நாகேந்திரன் ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர்.
மேலும், பிரபல ரவுடிகளான மொட்ட கிருஷ்ணன் மற்றும் சம்போ செந்தில் ஆகியோர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக காவல்துறையால் சேர்க்கப்பட்டனர். ஆனால், அவர்களை கைது செய்ய முடியவில்லை. சம்போ செந்தில் இங்கிலாந்து நாட்டிலும், மொட்ட கிருஷ்ணன் அரபு நாட்டில் ஒன்றிலும் தலைமறைவாகி பதுங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களை கைது செய்ய சர்வதேச காவல்துறையின் உதவியும் நாடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரினர். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிபிஐ போலீசார் இந்த வழக்கின் விசாரணையை தற்போது கையில் எடுத்துள்ளனர். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன.
செம்பியம் போலீசார் பதிவு செய்திருந்த வழக்கின் அடிப்படையில், சிபிஐ போலீசார் தற்போது மீண்டும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த புதிய விசாரணையில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு சாட்சியிடமும் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிபிஐ விசாரணையின் மூலம் புதிதாக குற்றவாளிகள் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கை விரைவாக விசாரித்து, சிபிஐ போலீசார் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 26 பேரில், தற்போது 12 பேர் நீதிமன்ற ஜாமீன் பெற்று வெளியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் அரங்கேறிய பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவிற்கு நேரில் சென்ற சிபிஐ போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்திற்கு யார் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள், உண்மையான காரணங்கள் என்ன, கொலைக்கு பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் யார் என்பது குறித்து சிபிஐ முழுமையான விசாரணையை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இந்த வழக்கில் தனிப்படை விசாரணை அதிகாரியாக இருந்து, திருவேங்கடத்தை என்கவுன்டர் மூலம் சுட்டு வீழ்த்திய காவல் ஆய்வாளர் புகாரி, சமீபத்தில் சவுகார் பேட்டை தொழிலதிபரை மிரட்டி ரூபாய் 40 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் பூக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த முக்கிய பின்னணியில், சிபிஐ தற்போது இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
