டெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் மே 20 ஆம் தேதி வரை 5 நாள் முக்கிய வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், ஐரோப்பிய மற்றும் வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகும்.
முதற்கட்டமாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஸயத் அல் நயானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கும் அவர் பயணம் செய்து, அந்நாட்டுப் பிரதமர்களையும் சந்திப்பார். இந்தப் பயணங்கள் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், நார்வே நாட்டிற்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறவிருக்கும் 3-வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். குறிப்பாக, 43 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் நார்வே செல்வது இதுவே முதல் முறையாகும். இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என நம்பப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இத்தாலிக்கும் பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.
தற்போது, அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் சூழலில், பிரதமர் மோடியின் இந்த 5 நாடுகளுக்கான பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலையை மேலும் வலுப்படுத்தும்.