மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 5-ந்தேதி நடைபெற்ற தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய இந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடியாக அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 'கெஸ் பேப்பர்' என்ற பெயரில் வினாத்தாள் கசிந்து, அதில் இருந்து சுமார் 600 மதிப்பெண்களுக்கு மேல் வினாக்கள் ஒத்துப் போனதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. மத்திய முகமைகளுக்குத் தேவையான ஆவணங்களை வழங்கி, இந்த விசாரணையை தீவிரப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீட் மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 21-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) முடிவு செய்துள்ளது. இந்திய அரசின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும், சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. நீட் தேர்வு தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ தகவல் வழிமுறைகள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.