சென்னை: அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் நிலவி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். "நீங்கள் அழைத்தால் பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, கழகத்தின் எதிர்காலத்தை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் மற்றொரு குழுவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒன்றிணைந்து முறியடிப்போம்' என்று நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக எஸ்.பி.வேலுமணி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
தனது அறிக்கையில் எஸ்.பி.வேலுமணி, "கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உண்மை நிலையை உணராமல் இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது வருத்தமளிக்கிறது. உங்கள் பிரசார உழைப்பை யாரும் மறுக்கவில்லை. ஆனால், கூட்டணி மற்றும் தேர்தல் செயல்பாடுகள் குறித்து யாரையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். உங்கள் வார்த்தைகளை நாங்கள் தம்பிகளாக ஏற்றுக்கொண்டோம். ஆனால் தோல்விக்குப் பிறகு, தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து அனைவரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து 'நான் மட்டுமே எல்லாம்' என்ற நிலையில் பேசுவதை எந்த தொண்டனும் ஏற்க மாட்டான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "இதுவே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களின் கருத்தாக உள்ளது. மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, மக்கள் ஆதரவு பெற்ற தற்போதைய அரசுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் அறத்தோடு எங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம். யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தைப் பிரிக்கும் எண்ணமோ இல்லை. இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை அனைவரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். 'எந்தத் தியாகமும் செய்யத் தயார்' என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான் – 'போங்க போங்க' என்று விரட்டி அடிக்காமல், 'வாங்க வாங்க' என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்! எல்லாமே மாறும்! கட்சி நன்றாக இருக்கும்!" என்று அவர் தெரிவித்துள்ளார்.