திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை கிராமத்தில், வெளிநாட்டில் வேலை செய்யும் கலியபெருமாள் (58) மற்றும் அவரது மனைவி தேவி (50) ஆகியோரின் மகன் ஐயப்பன் (32) போதைக்கு அடிமையானதால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பொறியியல் பட்டம் பெற்றிருந்தும் வேலைக்கு செல்லாமல், மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ஐயப்பன், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பியுள்ளார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஐயப்பன், அதே ஊரில் வசிக்கும் தனது தாத்தா பிச்சைமுத்து மற்றும் பாட்டி சந்திரா வீட்டிற்கு சென்று பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, அவரது தாயார் தேவி, ஐயப்பனை சமாதானம் செய்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும், பணம் கிடைக்காத ஆத்திரத்தில் ஐயப்பன், அடுத்த நாள் அதிகாலை 5 மணியளவில் மீண்டும் தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு தூங்கிக்கொண்டிருந்த தாத்தா பிச்சைமுத்து மற்றும் பாட்டி சந்திரா மீது நாற்காலியை தூக்கி வீசி அவர்களை மயக்கமடைய செய்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த தேங்காய் எண்ணெயை இருவர் மீதும் ஊற்றி தீயை கொளுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டிற்குள் எரிந்த நிலையில் கிடந்த பிச்சைமுத்து மற்றும் சந்திரா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலையில் ஈடுபட்ட ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை பழக்கத்தால் ஒரு பேரன் தனது தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.