புதுடெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம் (WPI) ஏப்ரல் மாதத்தில் 8.3% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 42 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். கடந்த மார்ச் மாதத்தில் இது 3.88% ஆக இருந்தது, ஆனால் ஏப்ரலில் இருமடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் உலகளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை சுமார் 50% அதிகரித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படவில்லை என்றாலும், வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால், உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும், எரிவாயு விநியோக சிக்கல்களால் தொழிற்சாலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், மத்திய அரசு நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஏப்ரல் மாத மொத்த விலை பணவீக்கம் 8.3% ஆக பதிவாகியுள்ளது. குறிப்பாக, எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம் 24.71% அதிகரித்துள்ளது. இது அக்டோபர் 2021-க்குப் பிறகு பதிவான அதிகபட்ச அளவாகும். மார்ச் மாதத்தில் இது வெறும் 1.05% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஏப்ரல் மாத சில்லறை பணவீக்கம் (CPI) 3.48% ஆக உயர்ந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 3.4% ஆக இருந்தது. பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, சென்செக்ஸ் 790 புள்ளிகள் உயர்ந்து 75,399-லும், நிஃப்டி 277 புள்ளிகள் உயர்ந்து 23,690-லும் நிறைவடைந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.5 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ், சிப்லா, பார்தி ஏர்டெல் பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன.