ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாத வினியோகத்தில் சுமார் ₹3 கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வருகை தருகின்றனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த இலவச லட்டு வினியோகத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது.
விசாரணையில், 2023 ஆம் ஆண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் வழங்கியதில் சுமார் ₹3 கோடியே 40 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக கோவில் பிரசாத பிரிவு பேஸ்கார் பஞ்சமூர்த்தி, பணியாளர் விக்ரம், பிரசாத கடையில் பணியாற்றிய சிவனேஸ்வரி, விற்பனையாளர் செல்வி, விற்பனை பிரசாத பிரிவு பொறுப்பாளர் லாவண்யா, இலவச லட்டு பிரிவு அம்பிகா ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தற்காலிக பணியாளர்களான பிரபு, ரவி, நித்தியானந்தம், பாலாஜி ஆகிய 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவிலில் நடைபெறும் இந்த நிதி மோசடி சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.