நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், விபத்தில் சிக்குவோரை தாமதமின்றி மருத்துவமனையில் சேர்ப்பதன் அவசியத்தை உச்ச நீதிமன்றமும், மத்திய கணக்கு தணிக்கையாளரும் சுட்டிக்காட்டினர். இதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விபத்து காலங்களில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் வகையில் அதிரடியான புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
விபத்தில் சிக்குவோருக்கு உடனடியாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அவசரகால பராமரிப்பு திட்டத்தின் கீழ், அவசரகால கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின்படி, பொதுமக்கள் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதில் இருந்து, 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் நடக்கும் விபத்து பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் 10 நிமிடங்களுக்குள் சென்றடைய வேண்டும். 10 கிலோமீட்டருக்கு அதிகமான தூரம் எனில், அதற்கேற்ப பயண நேரம் கணக்கிடப்படும்.
மேலும், அழைப்பு பெறப்பட்டதில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள், விபத்தில் சிக்கியவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவை மீறும் பட்சத்தில் அல்லது அவசர அழைப்பை நிராகரிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஒப்பந்ததாரருக்கு, தவறு நிகழும் ஒவ்வொரு முறையும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது.
தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் 3,000 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 1,000 ரோந்து வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் இயக்கத்தை துல்லியமாக கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவிகளும், சிறப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ஆம்புலன்ஸ்களில் உரிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் போதுமான ஊழியர்கள் இல்லாவிட்டாலும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், 1033 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் விபத்து காலங்களில் உயிர்காக்கும் சிகிச்சையை விரைவாக உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
