தமிழக சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, அதில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விலகி, த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ், வரும் காலங்களிலும் இதே கூட்டணி தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
தற்போதைய முதல்வர் விஜய், ஏற்கனவே ஆட்சியில் பங்கு தருவதாக உறுதியளித்துள்ள நிலையில், காங்கிரஸையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளது. அதன்படி, காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகளும், ஒரு மேல்சபை எம்.பி. பதவியும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த வேட்பாளர்களுடன், காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், தேர்தலில் வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை, மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் டெல்லிக்கு அழைத்துச் சென்றார். அங்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அவர்கள் இன்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.