10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், முதல்வர் யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வந்த முதல்வர் யார் என்ற இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்து, வி.டி.சதீசன் முதல்வராக பொறுப்பேற்கிறார். ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணு கோபால் போன்ற முக்கிய தலைவர்களிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதியில் வி.டி.சதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். யார் இந்த வி.டி.சதீசன்? அவரது பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நெட்டூரில் 1964 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி பிறந்தவர் வி.டி.சதீசன். அவரது தந்தையார் தாமோதர மேனன், தாயார் சிலாசினி. பள்ளிப் படிப்பை பனங்காடு உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை தேவராவில் உள்ள சேக்ரட் ஹார்ட் கல்லூரியிலும் முடித்தார். சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், கேரள சட்ட அகாடமி கல்லூரியில் சட்டப் படிப்பையும், திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் முதுகலை சட்டப் படிப்பையும் முடித்துள்ளார்.
சட்டப் படிப்பை முடித்த பிறகு, சுமார் 10 ஆண்டுகள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார் வி.டி.சதீசன். இவரது மனைவி ஆர். லட்சுமி பிரியா. இவர்களுக்கு உன்னிமாயா என்ற மகள் உள்ளார். அரசியலில் தனது பயணத்தை 1986-87ல் தேசிய மாணவர் காங்கிரஸ் செயலாளராகத் தொடங்கிய இவர், 1996 ஆம் ஆண்டு பரவூர் தொகுதியில் முதன்முதலில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.
ஆனால், விடாமுயற்சியுடன் 2001 ஆம் ஆண்டு பரவூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று கேரள சட்டசபைக்குள் நுழைந்தார். அதன் பிறகு, 2006, 2011, 2016, 2021 எனத் தொடர்ந்து அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். தற்போது, 2021 இல் 5வது முறையாக வெற்றி பெற்று எதிர்கட்சித் தலைவராகவும் செயல்பட்ட இவர், 2026 சட்டசபை தேர்தலில் 6வது முறையாக வெற்றி பெற்று, தற்போது மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.