கடந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல் திருச்சி கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசின் அரசிதழில் இன்று வெளியானது.
ஆனால், இந்த அரசிதழில் சபாநாயகர் அப்பாவு என்று குறிப்பிடப்பட்டிருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு, 17-வது சட்டசபையின் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் கடந்த 12-ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், புதிய சபாநாயகர் பதவியேற்கும் முன்பே, பழைய சபாநாயகரின் பெயர் அரசிதழில் இடம்பெற்றது எப்படி என்ற கேள்வி எழுந்தது. இது கவனக்குறைவால் நடந்த பிழையா எனவும் பலர் சந்தேகிக்கத் தொடங்கினர்.
இது தொடர்பாக அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், அப்பாவு பெயர் இடம்பெற்றது கவனக்குறைவால் நிகழ்ந்த தவறு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பதவி ஏற்பதற்கு முன்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு தொடர்பான அறிவிப்புதான் இன்று அரசிதழில் வெளியாகியுள்ளது. புதிய சபாநாயகர் பதவி ஏற்காத சூழலில், முந்தைய உத்தரவின்படி முன்னாள் சபாநாயகரான அப்பாவுவின் பெயர் அதில் இடம்பெற்றுள்ளது.
எனவே, இது ஒரு நிர்வாக ரீதியான நடைமுறைப் பிழை அல்ல என்றும், உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சி என்றும் அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அரசின் விளக்கத்தால் தற்போது தெளிவு ஏற்பட்டுள்ளது.