டாடா குழுமத்தின் தலைவராக கடந்த 2017 முதல் பதவி வகித்து வந்த சந்திரசேகரன், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். வரும் 2027 பிப்ரவரியில் இவரது பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், நிர்வாகக்குழு தொடர்ந்து பணி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டாடா டிரஸ்ட் தலைவர் நோவல் டாடாவுடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் பங்குதாரர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'டாடா குழுமத்தில் எனது 40 ஆண்டுகாலப் பணியை நிறைவு செய்துள்ளேன். மிகவும் மதிப்பிற்குரிய இந்த நிறுவனத்திற்குப் பங்களிக்கும் வகையில் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகவும், ஒரு முக்கியப் பொறுப்பாகவும் இருந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் நிறுவனத்திடம் பணி நீட்டிப்பு எதுவும் கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி டாடா குழுமத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், சந்திரசேகரன் பதவி விலகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா செய்துள்ளதன் எதிரொலியாக, டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா பவர் உள்ளிட்ட டாடா குழுமத்தின் பங்குகள் சுமார் 3% வரை சரிந்துள்ளன. இந்த திடீர் ராஜினாமா, டாடா குழுமத்தின் எதிர்கால நகர்வுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
