தமிழகத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திமுக ஆட்சியின் கீழ், கடந்த 2023, மார்ச் 27 அன்று சட்டசபையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில், சுமார் 1,13,75,492 பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கூடுதல் பெண்கள் சேர்க்கப்பட்டு, தற்போது 1.31 கோடி பெண்கள் இந்த உரிமைத்தொகையை பெற்று வருகின்றனர்.
தேர்தல் காலங்களில், பெண்களைக் கவரும் வகையில், தமிழக அரசு முன்கூட்டியே மூன்று மாதங்களுக்கான உரிமைத்தொகையாக ரூ.3,000 மற்றும் கோடை சிறப்புத்தொகையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000-ஐ பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியது. இதனால், மே மாதத்திற்கான உரிமைத்தொகை ரூ.1,000 ஆக இருக்குமா அல்லது முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் அளித்த ரூ.2,500 ஆக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது.
இந்நிலையில், இதுகுறித்து பலரது கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் விஜய் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, வழக்கம்போல ரூ.1,000 ஆக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பெண்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, திட்டத்தின் எதிர்கால மறுசீரமைப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.