நானி நடிப்பில் உருவாகி வரும் ‘த பாரடைஸ்’ திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கியுள்ள இந்தப் படத்தில் கயாடு லோஹர், ராகவ் ஜுயல், மோகன் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.எல்.வி சினிமாஸ் சார்பாக சுதாகர் செருக்கு இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப் படம் மார்ச் 26 அன்று வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அதே தேதியில் ‘துரந்தர் 2’ படம் வெளியாவதால், ‘த பாரடைஸ்’ படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், இந்தப் படத்திற்கு ரீ ஷூட் நடைபெறுவதாகவும், இதனால் படத்தின் வெளியீடு மேலும் தாமதமாகும் என்றும் சில செய்திகள் பரவின.
ஆனால், இந்தப் படத்தின் படக்குழு இந்த ரீ ஷூட் செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘த பாரடைஸ்’ படத்தின் 100 நாட்களுக்கு மேலான படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாகவும், மீதமுள்ள படப்பிடிப்பும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் செய்திகளை மட்டுமே நம்புமாறு படக்குழு ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 'த பாரடைஸ்' படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.