திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது' என்ற தனது நிலைப்பாட்டின்படியே, திமுக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டமன்றத்தில் தங்களது தோழமை இயக்க உறுப்பினர்களான திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகியோரும் வெளிநடப்பு செய்ததற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததை திமுக மதிக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த அனைவரின் நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 3 நாட்களாக ஆளுங்கட்சியின் செயல்பாடுகளும், அதற்கு தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளுமே இதற்கு சாட்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'Clean Politics' சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது 'Dirty Politics' செய்வதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிளவுபட்ட அதிமுகவில், உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 'உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?' என்று வாக்களித்த மக்களே வருந்திப் பேசுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரடியாகச் சாடிய ஸ்டாலின், உங்கள் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அடுத்து பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு என்ன 'Return Gift' கொடுக்கப் போகிறீர்கள் என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள் என்றும் கூறியுள்ளார். திமுக ஒருபோதும் தனது கொள்கைகளில் இருந்து மாறாது என்றும், ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படும் என்றும் தனது அறிக்கையில் அவர் உறுதியளித்துள்ளார்.