தமிழக சட்டமன்றத்தில், 'அம்மா உணவகம்' யாருடைய ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டது என்பது குறித்து திமுக, த.வ.க, மற்றும் அதிமுக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது, தற்போதைய திமுக அரசு, 'வெற்றி திட்டங்கள்' என ஸ்டிக்கர்களை ஒட்டி பழைய திட்டங்களையே செயல்படுத்துவதாகவும், பல்வேறு துறைகளுக்கான நிதி, குறிப்பாக பள்ளி கல்வித்துறைக்கான நிதி பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். "மாற்றம் மாற்றம் என்று சொன்னீர்களே. அது பெயர் மாற்றம் தானா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 'அம்மாவின் பசுமை இல்ல திட்டம்' ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு 'வெற்றி இல்ல வீடு' திட்டமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், விலையில்லா மிதிவண்டி திட்டம் 'நவீன பிராண்டட் மிதிவண்டிகளாக' மாற்றப்பட்டுள்ளதாகவும், விலையில்லா மடிக்கணினி திட்டம் 'வெற்றி மடிக்கணினி திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், "எந்த திட்டங்களும் நிறுத்தப்படவில்லை. முதல்வர் ஆட்சிக்கு வந்த பிறகு அத்திட்டங்கள் புதிய செயல் வடிவம் பெற்றுள்ளன. ஸ்டிக்கர் ஆட்சி யார் மூலம் உருவானது என்பது அனைவருக்கும் தெரியும். அதை பயன்படுத்த வேண்டாம் என்று பார்க்கிறேன்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய த.வ.க உறுப்பினர் ஆதவ் அர்ஜுனா, திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை வரவேற்று, அவை மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். இதற்கு உதாரணமாக 'அம்மா உணவகம்' திட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.
ஆதவ் அர்ஜுனா, 'அம்மா உணவகம்' தங்கள் ஆட்சியில் தான் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறிய கருத்துக்கு, திமுக உறுப்பினர் கே.என்.நேரு மற்றும் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் எதிர்வினையாற்றினர்.
அவர்களைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "ஆட்சி அமையும் பொழுது ஆட்சியாளர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வருகிறார்கள். ஆட்சி மாற்றம் வரும்பொழுது அதே பெயரில் அந்த திட்டம் செயல்பட்டால் நல்லது. அதே பெயர் தொடர்ந்தால் இந்த பிரச்சினையே வராது" என்று கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், "திமுக மற்றும் அதிமுக ஆட்சியிலும் பெயர்கள் மாற்றப்பட்டன. பெயர் மாற்றப்பட்டது உண்மை. அதை மறுக்க முடியாது. இங்கு பல பேர் அதே பெயரில் திட்டங்களை தொடர வேண்டுமென சொல்கிறார்கள்" என்று கூறி விவாதத்தை முடித்து வைத்தார். இந்த விவாதம் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
