தமிழகத்தின் நலனையும், உரிமைகளையும் காப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் உறுதியாக இருக்கும் என அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பு மக்களும் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை என்றும் மறக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
2019 முதல் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை மு.க. ஸ்டாலின் உரித்தாக்கினார். குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் இன்னும் பல புதிய கட்சிகள் இணைந்து மாநில நலனுக்கான குரலை ஓங்கி ஒலிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள், போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத கட்சிகள், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்கள் என அனைவரின் ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, எஸ்டிபிஐ, தமிழ்த்தேசம் கட்சி, கிறித்துவ நல்லெண்ண இயக்கம் போன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் நன்றி கூறினார். மேலும், 93 வயதிலும் பரப்புரை மேற்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பிற கட்சித் தலைவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தேர்தல் களத்தில் சில மனத்தாங்கல்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கும் பொறுப்பேற்பதாகக் கூறிய ஸ்டாலின், தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒருங்கிணைந்து செயல்படுவதே முக்கியம் என்றார். ஒரு கோடியே 54 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, 72 தொகுதிகளில் வெற்றி பெற்றது, மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும், இந்த நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வோம் என்றும் அவர் உறுதியளித்தார். தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும், அதற்கான போர்க்குணமும் தங்களுக்கு உரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.