தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஓய்வூதிய நிதி ஒதுக்கீட்டில் சுமார் ரூ.14,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் மற்றும் செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர், முதல் நிதிநிலை அறிக்கை கடந்த 05-08-2026 அன்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய காலப் பலன்களுக்கான ஒதுக்கீடு ரூ.14,000 கோடி அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளனர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில், நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதியத்திற்கான ஒதுக்கீடு ரூ.14,000 கோடி குறைக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் சார்பில் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்கான நிதி குறைப்பில், முந்தைய திராவிட முன்னேற்றக் கழக அரசால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதிளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடான ரூ.11,000 கோடி முழுமையாக வெட்டப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு இனங்களில் கூடுதலாக ரூ.3,000 கோடி அளவுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தமாக ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் முழுமையாகக் கவனம் செலுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஓய்வூதிய காலப் பலன்களில் ரூ.14,000 கோடி அளவுக்கு நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டிருப்பதற்கான விளக்கத்தை தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்நாள் கனவான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பையும் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு குறைப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலப் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
