கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இருப்பினும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்தது. முதலமைச்சர் பதவிக்கு கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன், ரமேஷ் சென்னித்தலா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இவர்களுக்கு ஆதரவாக தொண்டர்களும் தனித்தனியாக பேரணி நடத்தினர்.
புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மேலிடக் குழுவினர் கேரளாவிற்கு வந்து ஆலோசனை நடத்தினர். ஆனால், எந்த தீர்வும் எட்டப்படாததால், அவர்கள் ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பினர். தொடர்ந்து, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூன்று முக்கிய தலைவர்களையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு அழைத்தது. அங்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மூவருமே தங்களுக்குத்தான் முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுப்பதற்காக, கேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர்களிடம் கட்சி மேலிடம் கருத்து கேட்டது. சுதாகரன், முரளிதரன், சுதீரன், எம்.எம்.அசன், முல்லப் பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் டெல்லிக்கு விரைந்தனர். மேலும், மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியிடமும் கருத்து கேட்கப்பட்டது. தற்போது, பிரியங்கா காந்தியும் இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி இடையே நடந்த முக்கியக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 'கேரளத்தின் புதிய முதலமைச்சர் யார்? என்பது குறித்து நாளை (இன்று) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்' என தெரிவித்தார். இதற்கிடையில், வி.டி. சதீசனின் வீடுகளில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.